Saturday, June 19, 2010

கோவை செம்மொழி மாநாட்டில் ஈரோடு கதிர்

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு இணைந்து நடைபெறும் தமிழிணைய மாநாடு 2010ல் வலைப்பதிவர்களுக்கான நிகழ்வில் 25/06/2010ம் நாள் பிற்பகல் 3:45 மணியிலிருந்து 4:15 மணிவரை முரசொலிமாறன் அரங்கத்தில் கவிஞர்.திலகபாமா, சிவகாசி அவர்கள் தலைமையில் நடைபெறும் அரங்கில் "வலைப்பூக்களால் நிகழ்ந்த சாதனை " என்ற தலைப்பில் உரைநிகழ்த்துகிறார் அன்பர் பதிவர் ஈரோடு கதிர் என்பதனை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.



அன்பருக்கு ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

நன்று தமிழ் வளர்க ! தமிழ்
நாட்டினில் எங்கணும் பல்குக ! பல்குக
என்றும் தமிழ் வளர்க - கலை
யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக !

............. பாரதிதாசன் .............

Wednesday, June 16, 2010

பல்வலியும் நெஞ்சுவலியும்...

ஒரு நல்ல ஞாயிற்றுக்கிழமை "அப்பா முருகா இன்னைக்கு என்னைய நம்பி வர்ற பேஷன்ட் நல்லது செய்ய எனக்கு வழிகாட்டு" என வேண்டியபடி கடைய திறந்து இருந்தேன். வருகிறேன் எனச் சொன்ன பேஷன்ட்களில் ஒருவர் மட்டும் வந்து பல் சுத்தம் செய்து சென்றார். சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவனும் அவன் தந்தையும் வந்தார்கள் பல் எடுக்க.அந்த சிறுவனுக்கு அவனுடைய கடவாய் பல் மிகவும் சொத்தையாகி எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. சிறுவன் பார்க்க ஆரோக்கியமாய்தான் இருந்தான் என்பதால் நானும் பொதுவான கேள்விகள் கேட்டு பல் எடுப்பதற்குமுன் குடுக்க வேண்டிய ஊசிமருந்தை செலுத்திவிட்டு என்ன படிக்கிறாய், என்ன சாப்பாடு, என்ன சினிமா பார்த்தாய் போன்ற கேள்விகள் மட்டும் கேட்டு அவனை ஆசுவசபடுத்திகொண்டு இருந்தேன்.

சில நிமிடங்கள் கழித்து அவன் போதிய மரவிப்பு வந்ததாய் சொல்லிய பின் பல் எடுத்தேன். நீண்ட நாட்களாய் சொத்தையாய் இருந்ததால் வலிக்கிறது,மயக்கம் வருவது போல் இருக்கிறது என்று கூறினான். பல் எடுத்த பின்.இது சகஜம் தானே என வலி மருந்தை ஊசியில் செலுத்திவிட்டு சிறிது நேரம் படுத்து இருக்கச்சொன்னேன். "அப்பா பிரச்சினை இல்லாம முடிஞ்சுது பல் உடையல" என்று எண்ணியபடி அவன் தந்தையிடம் பேச ஆரம்பித்தேன். "ஏங்க இவ்வளவு மோசம் ஆகிறவரை என்ன செஞ்சீங்க ? கொஞ்சம் முன்னாடி வந்து இருந்தா பல்லை வேர் சிகிட்சை செய்து காப்பாத்தியிருக்கலாம், இல்ல பல் எடுக்கணும் என்றலும் முன்னாடியே செஞ்சுருக்கலாம்" என்று சொல்லிமுடிக்க அவர் "இல்லங்க எடுத்து இருக்கலாம்தான், ஆனா நெஞ்சுவலினு ஆசுபத்திரிக்கும் வீட்டுக்கும் அலைஞ்சு திரிஞ்சு அதுதாங்க லேட் ஆகி போச்சு "என்றார். எனக்கோ "ஐயோ இவரை போய் நாம் கடிஞ்சுட்டமே" எனத்தோன்ற குரலில் கொஞ்சம் சாந்தம் வரவழைத்து "இப்ப பரவாயில்லையா?, அவங்க அம்மா கூட பையன அனுப்பிருக்கலாமே" என்று சொல்லிமுடித்தேன்.

அழகாய் சொன்னார் "நெஞ்சுவலி எனக்கு இல்லீங்க, பையனுக்கு" என்றார். சரி அதுவேறு மகன் என்று எண்ணிய படி கேட்க,அவர் சொன்ன பதில் கேட்டு எனக்கு மயக்கம் வராத குறை. இப்ப பல் எடுக்கப்பட்ட சிறுவன் தான் இருதயநோயாளி. இதற்கு முன் பார்த்த பல் டாக்டர்கள் ரத்தஅழுத்தம், மற்றும் இருதய நிபுணரின் பரிந்துரை வேண்டும் எனக்கூறியிருக்கலாம். அந்த அனுபவத்தில் பாடம் கற்ற அவர் என்னிடம் எதுவும் கூறவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. உள்ளுக்குள் எனக்கும் ஒரு பதைபதைப்பு ஏற்பட்டது. மறுமுறை நாளை வர வேண்டும் என்று கூறி பல் எடுத்தபின் கடைபிடிக்க வேண்டிய அனைத்தையும் கூறி விடைகொடுத்தேன். அவன் நல்ல நேரமோ என் நல்ல நேரமோ எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை.



உங்களுக்கு அலைய முடியாது என்பதற்காக மருத்துவரிடம் எந்த தகவலையும் மறைக்காதீர்கள். உங்களுடைய எந்தவொரு உடல் நலக்குறைவையும் மருத்துவரிடம் தெரிவியுங்கள். அதற்கு மாற்று மருத்துவமுறை இருக்கும் . அறிவாளிகளாய் மருத்துவரிடம் இருந்து எதையும் மறைத்து உங்கள் சிரமத்தை பின்னர் அதிகம் ஆக்கிக்‘கொல்லா’தீர்கள். ஆம் எழுத்து பிழை அல்ல வாழ்க்கையே பிழை ஆகும் என்பதை சொல்லவே இந்த "கொல்லாதீர்கள்".

ஒரு நபர் மருத்துவமனையில் இருந்து திடகாத்திரமாக வெளியேறுவது வரை மருத்துவரின் பொறுப்பு. பல் எடுத்து இரண்டு நாள் கழித்து மரணம், ஒரு மாதம் கழித்து கான்சர் வந்தது என்பது எல்லாம் மருத்துவதுறையால் மறுக்கப்படும் சம்பவங்கள். பல் எடுக்கப்பட்டது மட்டுமே ஒருவரின் மரணதிற்கோ இல்லை வேறு உடல்நலக் குறைவுக்கோ காரணமாய் இருக்க முடியாது. பல் எடுக்கப்பட்ட பின் அந்த நோய் தன்னை வெளிப்படுயிருக்கலாம் என்பது மட்டுமே உண்மை. பெரும்பாலும் சொல்லப்படும் சோதனைகளும், சிகிச்சைக்கு முன், பின் கூறப்படும் அறிவுரைகளும் உங்கள் நலனுக்கே. தங்கள் விருப்பம் போல் மருந்து உட்கொள்வது, மருத்துவரின் அறிவுரைகளை புறக்கணிப்பது நீங்கள் உங்களுக்கு செய்து கொள்ளும் மிகபெரிய கண்டிக்கக்கூடிய செயல்.

பின் ஏதும் தவறு நடக்கும் பொழுது மருத்துவரை குறை கூறி பயன் இல்லை. உங்கள் நலனை பேணுவது தான் மருத்துவரின் தலையாய கடமை. உங்கள் நலனை காக்க ஒத்துழைப்பு கொடுங்கள்.


நன்றி
பல் மருத்துவர் ரோகிணி சிவா
அவரின் வலைப்பூ


...

Thursday, June 10, 2010

மனிதம் மிளிர்கிறது...





அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ளசிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒருசிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்கமுடியாத பேச்சாக அமைந்தது..

அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார்

இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்றுஎப்படிச் சொல்ல முடியும்? சாதாரண குழந்தைகள் சாதாரணமாகச் செய்ய முடிந்த எத்தனையோ வேலைகள்என் மகன் ஷாயாவால் முடிவதில்லை. அவனால் சின்னச் சின்ன தகவல்களைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அவனால் செய்ய முடிந்தவைகளை விட செய்ய முடியாதவை தான் அதிகம். செய்ய முடிந்தவைகளைக் கூட அரைகுறையாய் தான் செய்ய முடிகிறது. அப்படி இருக்கையில் இறைவன்படைப்பில் நிறைவு உள்ளது என்பதை எப்படி நம்மால் கூற முடியும்?”

அவர் உருக்கமாகக் கேட்டு விட்டு அங்கு கூடியிருந்தோரைப் பார்த்தார். அத்தனை பேரிடமும் அதற்குபதில் இருக்கவில்லை. அத்தனை பேரும் அந்த மனிதரின் மன வலியை உணர்ந்தவர்களாக மௌனமாகஇருந்தார்கள். அந்தத் தந்தை சொன்னார்.

“நான் நம்புகிறேன், இது போன்ற குழந்தைகளைப் படைக்கும்இறைவன் நிறைவை அந்தக் குழந்தைகளிடம் பழகும் மனிதர்களிடம் தான் எதிர்பார்க்கிறான். இது என் மகன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் போது நான் புரிந்து கொண்டேன்....”

அவர் அந்த நிகழ்ச்சியை மிகவும் நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

ஒரு நாள் மதிய வேளையில் அவரும் அவர் மகன் ஷாயாவும் ஒரு விளையாட்டு மைதானம் அருகில்நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்த மைதானத்தில் சில சிறுவர்கள் தளப்பந்து (base ball)விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஷாயா அந்தச் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து தன் தந்தையிடம்கேட்டான். “அப்பா அவர்கள் என்னையும் அந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களா?”அவருக்குத் தன் மகனால் அந்த விளையாட்டைத் திறம்பட விளையாட முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.ஆனால் அந்த சிறுவர்களோ மிகத் தீவிர ஈடுபாட்டுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.அவர்களிடம் சென்று கேட்கவே தயக்கமாக இருந்தாலும் அவர் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை என்று எண்ணினார். தயக்கத்துடன் சென்று ஒரு சிறுவனிடம் கேட்டார்.

“என் மகனும ஆடஆசைப்படுகிறான். அவனையும் சேர்த்துக் கொள்வீர்களா?” அந்த சிறுவன் ஷாயாவைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் குறைபாடுள்ள சிறுவன் என்பதை அந்தசிறுவன் புரிந்து கொண்டான். தன் நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் ஷாயாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து மனம் இளகியவனாக அவரிடம் சொன்னான். “நாங்கள் இப்போது எட்டாவது இன்னிங்க்ஸில் இருக்கிறோம். இப்போதே ஆறு ரன்கள் குறைவாக எடுத்து பின்னணியில் இருக்கிறோம். என்னுடைய டீமில் அவனைச் சேர்த்துக் கொள்கிறேன். ஒன்பதாவது இன்னிங்க்ஸில் அவனுக்கு பேட்டிங் தருகிறோம்” அதைக் கேட்டு ஷாயாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த தந்தையின் மனம் நிறைந்தது.

ஷாயா அந்த விளையாட்டுக்காக கையுறையை மாட்டிக் கொண்டு மைதானத்தில் பெருமிதத்துடன் போய் நின்றான். ஆனால் அந்த விளையாட்டின் எட்டாவது இன்னிங்க்ஸிலன் இறுதியில் ஷாயாவை சேர்த்த அணி மூன்று ரன்கள் மட்டுமே பின்னணியில் இருந்தது. நன்றாக ஆடத் தெரிந்தவன் ஆடினால் அவர்கள் அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில் ஷாயாவை அவர்கள் ஆட விடுவார்களா என்ற சந்தேகம் அவன் தந்தைக்கு வந்தது.

ஆனால் சொன்னபடி ஷாயாவை ஆட அவர்கள் அனுமதித்தார்கள். ஷாயாவிற்கு அந்த பேட்டை சரியாகப் பிடிக்கவே தெரியவில்லை. அவனை ஆட அனுமதித்த சிறுவன் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான். பந்து எறியும் சிறுவன் சற்று முன்னால் வந்து அந்தப் பந்தை மென்மையாக வீசினான். அந்தப் பந்தை ஷாயா அடிக்க உதவ வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருந்தது. அந்தப் பந்தை அவன் அப்படி வீசியும் ஷாயாவால் பேட்டால் அடிக்க முடியவில்லை. அடுத்த முறை ஷாயாவின் அணிச்சிறுவன் ஒருவன் ஷாயாவுடன் சேர்ந்து பேட்டைப் பிடித்துக் கொண்டான்.பந்தெறிபவன் அடுத்த முறையும் சற்று முன்னால் வந்து மென்மையாகவே வீசினான். ஷாயாவும்,அவனுடைய சகாவும் சேர்ந்து இந்த முறை பந்தை அடித்தார்கள். அந்தப் பந்து குறைவான வேகத்தோடுப்ந்தெறிபவன் காலடியில் வந்து விழுந்தது. அவன் அதை எடுத்து முதல் தளக்காரனிடம் எடுத்து வீசினால் ஷாயா ஆட்டமிழந்து அவன் அணியும் தோற்று விடும்.ஆனால் அந்தப் பந்தெறிபவன் வேண்டுமென்றே அதை மிக உயரமாகத் தூர வீச ஷாயாவின் அணியினர் கத்தினார்கள். “ஷாயா ஓடு. வேகமாக முதல் தளத்துக்கு ஓடு...” ஷாயா இப்படியொரு நிலையைஎதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஒரு கணம் திகைத்து பின் தலை தெறிக்க ஓடினான். முதல் தளத்தைஅவன் அடைந்த போது அந்தப் பந்தை எதிரணிச் சிறுவன் எடுத்தான். முதலில் பந்தெறிந்தவனுடைய எண்ணம் அவனுக்கும் புரிந்திருந்தது.

ஒரு ரன் எடுத்து முடித்த நம்ப முடியாத மகிழ்ச்சியில் இருந்த ஷாயாவின் முகத்தைப் பார்த்தவன்



அந்த பந்தை தன் அணிக்காரன் எளிதில் பிடிக்க முடியாதபடி வீசினான். மைதானத்தில் “ஷாயா ஓடு. இரண்டாம் தளத்திற்கு வேகமாக ஓடு” என்ற சத்தம் பலமாக எழுந்தது.ஷாயா மீண்டும் தன்னால் முடிந்த வரை தலை தெறிக்கஓடினான். இப்படியே அந்த ஆட்டத்தில் ஷாயாவை நான்கு ரன்கள் எடுக்க வைத்தார்கள். ஷாயாவின் அணி வெற்றி பெற்றது.. நான்காவது ரன்னை எடுத்து முடித்த போது மைதானத்தில் பதினெட்டு ஆட்டக்காரச் சிறுவர்களும் ஷாயாவைத் தோள்களில் தூக்கி ஆட்ட நாயகனாகக் கொண்டாட ஷாயாவின் முகத்தில் தெரிந்த மட்டில்லாத மகிழ்ச்சியைக் கண்ட அந்த தந்தை கண்ணில் அருவியாகக் கண்ணீர் வழிந்தது.

அதைச் சொல்லும் போதும் அந்தத் தந்தை கண்களில் கண்ணீர். “அன்றைய தினத்தில் அந்த பதினெட்டு சிறுவர்களும் இறைவனின் படைப்பின் நிறைவை எனக்குத் தெரியப்படுத்தினார்கள். என் மகன் அது வரை அவ்வளவு மகிழ்ச்சியாகப் பெருமையுடன் நின்றதைக் காணும் பாக்கியம் எனக்கு இருக்கவில்லை. அந்த நாள் என் மகன் வாழ்விலும், என் வாழ்விலும் மறக்க முடியாத நாளாகி விட்டது....”

அந்த சிறுவர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் வெல்லத் துடிக்கிற வயது. அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம். வாழ்வில் பெரிய பெரிய சித்தாந்தங்கள் எல்லாம் அறிந்திருக்கும் வயதோ, பக்குவமோ இல்லாத வயதினர் அவர்கள். அவர்கள் அன்று முன்பின் அறியாத ஷாயா என்ற குறைபாடுள்ள சிறுவனிடம் காட்டிய அன்பும், பரிவும் ஒப்புயர்வில்லாதவை. அவர்கள் அந்தச் சிறுவனை வெற்றி பெறச் செய்த செயல் சாமானியமானதல்ல.

இது போன்ற செயல்களில் தான் உண்மையாக மனிதம் மிளிர்கிறது. அந்த விளையாட்டை ஷாயாவின் வீட்டார்கள் ஆடி அவனை வெற்றி பெறச்செய்திருந்தால் அது செய்தியல்ல. முன்பின் அறியாத சிறுவர்களிடம் இருந்து அந்த அன்பு பிறந்தது தான் வியப்பு. அது தான் மனிதம்.

இது போன்ற மனிதம் மிளிர பெரிய பெரிய தியாகங்கள் கூடத் தேவையில்லை. மிகப் பெரிய நிலையில் இருக்க வேண்டியதில்லை. தங்களைப் பெரிதும் வருத்திக் கொண்டு யாருக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் நம்முடைய அன்பானசிறிய செயல்களால், சிறிய விட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அதுவே மனிதம்.

இந்த மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால்,வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில் அவற்றை நிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்! நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம் முயற்சிப்போமா?

நன்றி என். கணேசன்
நன்றி பெரோஸ்

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO